முத்த யுத்தம்
22
ஆணின்
சூட்சுமங்களை உசுப்ப வல்லவள்தான்,
எனினும் நட்பு
புரியாதவள் அல்ல அவள் என்பதே அழகான விஷயமாய் இருக்கிறது. உன் தமிழை வணங்குகிறேன்
என்றதை அவள் அங்கீகரித்தான். நியாயமே, என்றாள். பதிலாக கரிசனத்துடன் மழையில் அவன்
திண்டாடி விடுவானே,
எனக் கவலையும்
காட்டினாள்.
"பரவாயில்லை.
மழை, இரவு, தனிமை,
கார்ப் பயணம்... இவை அழகானவை,
கைத்தல நிறைகனி, அப்பமொடு அவல் பொரி...
எல்லாம் சேர்த்துக் கிடைக்கின்றன. உங்கள் நட்பும்... " என்று கடைசிப்
பகுதியைச் சேர்த்துக் கொண்டான். "சிறுகுளத்து மயிலாட மழை வராமற் போகுமா?" என்று
பத்மினியிடம் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொண்டு இப்போது சொன்னான்.
"ஓ!" என்று
சிரித்தாள்.
உடனே
சிரிச்சிர்றதா? என் இதயம் குட்டிக்கரணம்
அடிக்குதடி பெண்ணே. தண்ணிக்குடம் கவுந்தாப் போல.
மழை வெளியதானே பெய்யுது.
வெளியதானே நனைக்குது.... அப்புறம் பாத்தா மூக்குக்குள்ளேர்ந்து தண்ணி வருது.
அதெப்டி?
தெர்ல!
மனோன்மணிட்ட
கேப்பமா? இப்பவா? லைட் அணைச்ச
வீட்டுக் கதவைத் தட்டியா?
எலேய். அவகிட்ட
சந்தேகம் கேக்கற சால்ஜாப்பெல்லாம் சும்மா... இந்த ஆமபளைங்க இருக்காங்களே. அவங்களை
நம்பவே கூடாது. குறிப்பா பொம்பளையாள்கள் கிட்ட அவங்க பேசும்போது கேட்க நினைக்கிற
கேள்வியே வேறாயிருக்கும். பேசுறது வேறா யிருக்கும். "செளக்கியமா?"ம்பான்னு
வெய்யி, உள்க்கேள்வி "பிரா முன்பட்டனா பின்பட்டனா?" என்பதாய்
இருக்கும். அதைத் தெரிஞ்சி என்ன பண்ணப் போறானோ? என்றாலும் ஒரு 'ஜென்ரல்
நாலட்ஜ்'... அவுக இம்ப்ரூவ்
பண்ணிக்கிராக.
ஐயம்
கணக்கெடுத்திருக்காப்ல. ஆமாமா,
இந்த மாதிரி
ஆராய்ச்சிகள்ல சூரன்லா... கல்யாணமாகாத பெண்கள் பேக்பட்டன். ஆயிட்ட அநேகாளுகள்
முன்பட்டன்! ஏன்?
ஏன்னா
அவங்கய்யா வாங்கித் தந்தது பின்பட்டன். புருசன்காரன் முன்பட்டன்.
நம்ம்
எழுத்தாளர் சுஜாதா சொல்வாரு. பையன் அப்பாகிட்ட கேட்டானாம். "அப்பா, நீங்களும்
அம்மாவும் ஹனிமூனுக்குப் போயிருந்தப்ப நான் உங்ககூட வந்தனா, அம்மா கூட
வந்தனா?"
அப்பா
சொன்னாரம் - "போம்போது எங்கூட வந்தடா. வரும்போது அம்மாகூட வந்தே!"
இந்த
எழுத்தாளர் சுஜாதா,
விக்கிரமாதித்தன், புஷ்பா
தங்கதுரை, அண்ணாச்சி ராஜநாராயணன், ஜெயமோகன். இப்ப
படுபாவி சங்கரநாராயணன்... ஆம்பளைங்களைத் தூங்க விடறதில்லை.
"ஆம்பிளைங்க
கொடுத்து வெச்சவங்க" என்றாள் மனோன்மணி. "வாழ்க்கை உங்க இஷ்டம்போல
அனுபவிக்க அமைகிறது.“
சொன்னே சரி.
சொல்லிட்டு அப்டிப் பெருமூச்சு விடப்படாது. வாசல் லைட். மெல்லிய ஷிஃபான்.
உள்ள மலராத தாமரைகள். மழை வேற வருது. குளிர். நேரமும்
ராப்பொழுது. நீ சோம்பல் முறிச்சப்பவே என் கிரிக்கெட் விக்கெட் சாஞ்சிகிட்டது.
கிளீன் போல்ட். மழைல நனைஞ்சி இதே பெருமூச்சை இவ விட்ருந்தா?... நான் பொத்னு
விழுந்திருப்பேன்.
கார்
ஓடிட்டிருக்கு. மழை ஆரம்பிச்சிட்டது. வாழ்க்கை எத்தனை ஜோராய் மாறிட்டது
என்றிருந்தது. பட்டணத்ல சோத்துக்கே டண்டணக்கான்னு காவடி எடுத்தம். இப்ப எல்லா
சம்பத்துகளும் சவுகரியங்களும்... என்ன ஆனந்தம். என்ன
எடுப்பு... கே.பி. சுந்தராம்பாள் பாடுவாளே வெண்ணிரணிந்ததென்ன... என்னயென்ன. என்று
ஒரேவரிய வெச்சி வாதாங்கொட்டைய பருப்பு எடுக்கறாப்ல கூட்டத்தை நச்சிருவா..."
சில ஆளுக போன்
எடுத்தவுடன் யார் பேசறதும்பான். அடுத்த பார்ட்டி இன்னும் பேச ஆரம்பிக்கல. யார்
பேசறதுன்னா என்ன அர்த்தம்?
எடேய், நீயேதாண்டா
பேசற, அறிவு
கெட்டவனேன்னு திட்டலாம் போலருக்கும்... அதைப்போல இந்த வெண்ணீறு அணிந்ததென்ன.
நாங்க எங்கம்மா அணிஞ்சிருக்கம். கே.பி. சுந்தராம்பா அம்மா... நீங்கதான் வெண்ணீறு
அணிஞ்சிருக்கீங்க... இதுல எங்களைப் பார்த்து என்னயென்ன... என்னயென்னன்னு உலுக்கி யுலுக்கி
சந்தேகம் கேட்டா எப்டி?
யம்மா தெரியாம்
அணிஞ்சிட்டேன்னு அணிஞ்சவனும் அழிச்சிட்டு எந்திரிச்சிப் போயிருவாப்ல.
அட சொன்னாப்ல
மழைல நனைஞ்சாதான் என்ன?
என்னன்னு நிக்க
மாட்டாது வார்த்தை,
பிரேக்
பிடிக்காத வண்டிமாதிரி... என்னயென்னயென்ன -ன்னு இழுக்குது. எல்லாம் சுந்தராம்பா பண்ணின
கூத்து.
கார் ஜன்னலை
ஏத்திவிடப் போனவன் முடிவு மாறி இறங்கிக் கொண்டான். சரியான மழையப்போவ்.
டீக்கடைக்காரன் வர்ற கூட்டத்தைப் பார்த்ததும் போணில தண்ணியெடுத்து பால்ல
ஊத்தினாப்போல...
சொட்ட
ஆரம்பித்த மழை, கொட்ட
ஆரம்பிச்சிட்டது.
தமிழ்ல
வார்ன்னா இங்கிலீஷ்ல போர். பிஓயுஆர். இங்கிலீஷ்ல வார்-னா தமிழ்ல போர். யுத்தம்.
வானத்தில்
மேகயுத்தம். தண்ணிரை ஊற்றுகிறது.
இப்போது
குளிரடங்கிய இரவு. நல்லிரவு இங்கிருந்து மனோன்மணி இல்லத்தின் திசையைப் பார்த்தான்.
மாப்ள திரும்பிப் போயிக் கதவைத் தட்டுவமா?
சேர்ந்தே
நனைவோம் பெண்ணே. நீ பெய்யெனப் பெய்யும் மழை.
பேய் எனப் பெய்பும்
மழை.
கற்புக்கான
வரையறைல்லாம் மாறிட்டதப்போவ். மனைவி பெய்னா இப்பல்லா மழை பெய்யறதில்லை. வெளியாளுக
பெய்னா ஒடனே பெஞ்சிருது. ஏன்?
தெர்ல!
எடேய் ரொம்ப
ஆடாதே. முதலாளிக்குத் தெரிஞ்சது சாட்டையடி தானப்போவ்... சில பணக்காரங்க, பெரும் அரசியல்
வாதிங்க பிடிக்காத வேலைகளை கீழ்ப்படியாளுகள் செஞ்சா தோட்டத்ல வெச்சி நாலுபேர்
முன்னாடி பெல்ட் அடி போட்டுத் தள்ளிருவாங்களாமே?
பத்மினி
வந்துர்றேன்... என்று அவசர அவசரமாய் வண்டியில் ஏறிக் கொண்டான்.
வெளியே பெய்கிற
மழைக்கும் அதுக்கும் ரஸ்தாவே தெரியவில்லை. வைப்பர் போட்டும் பாதை தெளிவாய் இல்லை.
மழையில் நனைஞ்சது பரவாயில்லை. இப்ப நனையாததுக்கும் அதுக்கும் குளிர் எடுத்து, தலையில்
இருந்து தண்ணீர் சொட்டியது,
போற வழிதான்
மேலப்புதூர். தாண்டிதான் சாயல்குடி. மேலப்புதூர்லயே வண்டியத் திருப்பி, கிழவிட்ட சாவி
வாங்கி வீட்லயே படுத்திருக்கலாம்.
யோசனையே இல்லை.
தானறியாமல் சாய்ல்குடிக்குப் போய்ச் சேர்ந்தான். அதற்கே காத்திருந்தாப்ல மழை மெல்ல
அடங்க ஆரம்பித்து அவன் வீட்டெல்லையைத் தொட்டதும் நின்றே விட்டது. மணி ரெண்டு
இருக்கும். பயண அலுப்பு. மழையில் நனைந்த அலுப்பு என்று உடம்பே வலித்தது. போய்ப்
படுக்கையில் விழுவம் என்றிருந்தது. கதவைத் தட்டிய ஜோருக்குத் திறந்தாள் பத்மினி.
அட, விழித்திருந்தாள்.
என்ன கரிசனம். இந்த மழைல மச்சான் மாட்டிக்குவாகளோன்னு... அதாங்க இல்லத்தரசின்றது.
பேண்ட்டை
அவிழ்த்து லுங்கிக்கு மாறியபடி சிரிப்புடன் "என்னைப் பத்தி ஏன் கவலைப்படறே? நீ
பாட்டுக்குத் தூங்க வேண்டிதானே?"
என்றான்.
"கரண்ட் இல்ல.
கொசுக்கடில தூங்க முடியல" என்றாள் பத்மினி.
... ஆனா மனோன்மணி
கவலைப் பட்டாளே?
·
இரவில் மழை ஊசி
போட்டதென்றால், பகலின் ஒளிக்
கிரணங்கள் வெப்ப ஊசிகளை ஏற்றின. ஜன்னல் வழியே எறிந்த ஊசியில் உடல் சுட விழித்துக்
கொண்டான். ஜூர டாக்டர் வேற ஊசி போடுவார். அது தனிக் கணக்கு.
"ஏளா
எழுப்பறதில்லையா?"
என்று பதறிபோய்
எழுந்து கொண்டான்.
"மொதலாளி
கரிசாலூரணில வெய்ட் பண்ணிட்டிருப்பாப்டி..."
"நான்
எழுப்பினேன். நீங்க எந்திரிக்கல. என்ன செய்யட்டும்"னு அவளும் கவலை
காட்டினாள். கணவன் திட்டு வாங்கிருவானோன்னு அவ கவலை அவளுக்கு, துட்டு
வாங்கிட்டு வார கணவன் திட்டு வாங்கிட்டு வெறுங்கையோட வந்தா?-ன்னு கவலை.
உடம்பு வலி, அசதி, கண்கள் சிவந்து
எரிந்தன. முகங் கழுவித் திருநீறு பூசினான். மனசில் வெண்ணீறணிந்ததென்ன... ச்சீயென
சளிபோல உதறினான். காபி தந்தாள் மனைவி. அவசர அவசரமாய்க்
குடித்தான்.
காபியை அவன்
உறிஞ்சற அதே சத்தத்தின் எதிரொலி போல ஒரு சத்தம். பாத்தா மாமனார் குறட்டை.
கவனித்தான்
ஏனோ. எதிர்பார்த்தபடி வெண்ணீறு அணிந்திருந்தார். டாய், நேராச்சி.
வண்டியேறியதுதான்
தெரியும். நேர கரிசலூரணி.
முதலாளி
குளித்து முடிச்சு ஜோராய் இருந்தாரு. காலை டிபன் ஆயிட்டதா? - எனக் கேட்க
நினைத்தான் . பசித்தது. காலைல காபி ரேடியேட்டர் பாய்ல் ஆனாப்ல எப்பவோ அது
ஆவியாயிட்டது.
"என்னால லேட்டு?"
"லேட்டாயிட்டு."
"நைட்ல மழைல
மாட்டிக்கிட்டியா?"
"இல்ல
மொதலாளி" என்று மனசில் சிரிச்சிக்கிட்டே அவருக்கு சஸ்பென்ஸ் கொடுத்தான்.
"பின்னே?"
எலேய் பெல்ட்
அடிக்கு வழி பண்ணிக்கிறாதே. பார்ட்டி மனோன்மணிதாசன்...
"நம்ம அம்மாவ
இறக்கி விடச்சிலே மழை இல்லைங்க சார். வர்றா வழிலதான் மழை..."
"அவங்க
நனையலியே" என்றார். அதான் சொல்றேனே, ஆம்பளைங்க வெளியே கேட்கிற கேள்வி வேற. உள்ள ஓடற எண்ணம்
வேற...
ஆனா. எனக்காக
ஒருவாட்டி ரெண்டு கையையும் உயர்த்தி சோம்பல் முறிச்சா முதலாளி!
"இல்ல"
என்றான். "நான் சாயக்குடி வந்து... இவுக (என் சம்சாரம்) வீட்ல
படுத்திருத்திட்டு வாரேன்...." பெல்ட்டுக்குத் தப்பிச்சிட்டாப்லதான்
இருந்தது.
மனோன்மணி
சொன்னதுக்கும் அதுக்கும் அந்த நைட் அவன் மட்டும் தங்கீர்ந்தா இவரால தாள முடியுமா?
நல்லவெளை. சரின்னு
சொல்லவில்லை.
"போலாங்களா?" என்றான்.
"சரி"
என்று அவன் சொன்னதைக் கேட்டாற்போல ஏறிக் கொண்டார்.
ஏறும்போது
வேட்டி நெகிழ, கட்டிக்
கொண்டார். பெல்ட் இல்லை.
ச்சே, தங்கிவிட்டு
வந்திருக்கலாம்.
காதில் தேன்போல
அவர் குரல் கேட்டது. "வழில ஐயரு ஓட்டல்ல நிறுத்து."
லேட் நைட்ல
பிரியாணி எடுப்பு எடுத்த உம்ம வயிறே பசிக்கும்னா... எங்க நிலைமையப் பாருங்க...
உடுப்பி ஓட்டல்
வாசலில் எவனோ அரைகுறை ஓவியனின் போர்டு. சாப்பா-டுப்போ-டப்ப-டும். டிபன் போ -
டப்வோவ்... என்று அதே சொல்லடுக்கில் நினைத்துக் கொண்டான்.
ஆர்டர் சொல்லி
விட்டுக் காத்திருந்தார்கள். உள்ள தனி ரூம் – பேமிலி ரூம். எந்த பேமிலி ஆளுகளும்
அங்க சாப்பிட மாட்டார்கள். 'மத்த' ஆளுகள்தான் அதை
சாஸ்தி யூஸ் பண்றது. ஏனப்போவ்?
அதுக்காக, தள்ளிட்டு வர்ற பார்ட்டிகள்
ரூம்னு போர்டு வைக்க முடியாதில்லே?
கதவு வேற
அதுக்கு. அவுக பார்ட்டிய நாம பாத்திருவமாக்கும்...
எலேய். நீங்க
மனோன்மணியப் பாத்திருக்கீங்களாடா?
அதும் சோம்பல்
முறிச்சி?
ஹா எங்க
முதலாளியே பாத்ததில்ல...
நான்... ஐயம்
பெருமாள் பாத்திருக்கேன்!
தனி அறையின்
சர்வர்கள் கருப்புக் கண்ணாடி அறைக்கதவைத் திறந்து உள்ளே போகும்போதும் வரும்போதும் ஓடாத
கடிகாரத்தின் முள்ளைச் சரிசெய்து கொண்டாற்போல அட்ஜஸ்ட் செய்து கொண்டே
இருந்தார்கள். ரவுண்ட் தி கிளாக் சர்வீஸ்னா இதுதானோ?
முதலாளி. இன்றைய
நிகழ்ச்சி என்ன வெச்சிருக்கார் தெரியவில்லை. எப்ப கிளம்புவார் தெரியவில்லை.
திருவிழா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தா மாதிரி. சனங்க எல்லார்த்துக்கும் அதில்
எத்தனை வருத்தம். அதும் அந்த ஊர்க்காரன் அத்தனை பேர்த்துக்கும் ஒரு ஊமைத் துக்கம்.
இத்தம் பெரிய கோவில் வளாகம் இனி பந்தல் நிழல் பிரித்து... வெயில்ல கெடக்கும், மனுசாள்
யாருமில்லாத அமைதி. பொறிகடலைக் கடை. சர்பத் கடைகள்... ராட்டினங்கள். விடாமல் சைக்கிள்
விடும் வித்தைக்கரன். பாம்பு உடல் மனுசத்தலை அதிசயப் பெண். லேகியம் விக்கிற
பார்ட்டி... எல்லாவனும் பட்டறையைக் கழட்டிட்டுப்
போயிருவாப்டி.
அம்மனே
உம்மென்றிருந்தாப் போலிருக்கும்...
அம்மனா அது உம்மன்.
உமன் அல்ல உம்மன்.
கடைசிநாள் ஐதிகமா...
கிராமத்து தெய்வங்கள் பத்தி வில்லுப் பாட்டு. சும்மா மாட்டு வண்டிப் பயணம்
போகிறாப்போல சலங்கை யொலிக்கிற ஜோர். ஆமா, ஆமா.. என்கிற பின்குரல் ஒத்திசைவு...
திருவிழா
சமயங்களில் எதும் வேறு நிகழ்ச்சி வெளியூர் நிகழ்ச்சி அவர் ஏத்துக்கிட்ட மாட்டார்
என நினைத்துக் கொண்டான். இராக்கொட்டம் அடிச்சிட்டு... பகலில் தூங்கண்டாமா
இரையெடுத்த மிருகம்?!
அவனுக்கு
வண்டியில் வரும்போதே தூக்கம் கண்ணைச் செருகியது. அவனைப் பார்த்து அவரும் கொட்டாவி
விடறாரு.
பத்மினியை.
நேத்து நைட்டு வீட்ல கொண்டு விட்ட்டு வர்ட்டுமான்னு கேட்டபோது மனோன்மணியப்
பாத்தாருல்ல... அதைப்போல -
ஓட்டல்ல சர்வர்
வந்து நிக்கான். அவர் "என்ன சாப்பிடறே?"ன்னு இவங்கிட்ட
கேக்காரு.
சொந்தமா
எப்பதான் யோசிப்பாரோ தெர்ல!
"வெங்காய
தோசை" என்றாய் ஆசையாய்.
"வேண்டாம்"
என்றவர் சர்வரிடம் "ரெண்டு பொங்கல் - வடை" என்று ஆர்டர் கொடுத்தார்.
போடா லூசுப்
பண்டாரம், என்று
கடுப்புடன் அவரை வைதான். அதன்பின் வீடு வந்து சேரும் வரை அவரோடு பேசவே இல்லை.
•
வாசல் ஈசிசேர்ல
சாஞ்சி தினத்தந்தி படிக்கிறாரு முதலாளி. நாட்ல எத்தனை கள்ளக்காதல் அம்பலமாச்சோ
தெர்ல. நம்ம கிராமத்து ஆட்களே விசித்திரம். பண்ணையாரும் விதி விலக்கல்ல. தலைப்புச்
செய்தி நாட்டு நிலவரத்தின் முக்கியச் செய்தி. மொதப்பக்கம் மொக்கையாப் போடுவானே? தினந்தந்தில
கூட வரும் - "இன்று தீபாவளித் திருநாள்!"னு...
அதை கடைசியாத்தான் அவரு படிப்பாரு. குத்து வெட்டுதான் முக்கியம். காவிரித் தண்ணி... வரும்போது
பாத்துக்கலாம்.
வருமா?
படிச்சாப்ல
அப்டியே கண்ணசந்துட்டாரு. மேல் ஃபேன் சுழற்சில பேப்பர் அவர் கைலேர்ந்து மயில்போல்
மேலெழும்பி அவன் பக்கம் பறந்து வருகிறது.
சிறுகுளத்து
மயிலா?
பட்டமென
மேலெழுந்த மனசை, அதட்டினான்.
இதெதுக்கு வம்புன்னு பேப்பரை அப்டியே கேட்ச் பிடிச்சி மடிச்சி வெச்சிட்டான். பயமய்
இருந்தது. காரை நிழலில் ஒதுங்கி யிருந்தான். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காலை
நீட்டி பின்சீட்டில் குப்புறப் படுத்தான். ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான்...
கால் மாத்திரம்
கொஞ்சம் கதவுக்கு வெளியே தெரிந்தது,
தூரப்
பார்வைக்கு ஆக்சிடெண்ட் போலத் தோணியது.
•
வெள்ளிதோறும்
தொடர்கிறேன்
நான்காம்
பாகம் முற்றும்
91
97899 87842 / 91 94450 16842